பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
பிரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மூலக்கூறு எந்திரம் உலக அளவில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியலுக்கான பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.
பெர்னார்டு பெரிங்கா
ஜே.பிரேசர் ஸ்டொட்டார்ட்
ஜீன்-பியரே சாவேஜ்
இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜீன்-பியரே சாவேஜ், இங்கிலாந்தில் பிறந்த அமெரிக்கரான ஜே.பிரேசர் ஸ்டொட்டார்ட் மற்றும் நெதர்லாந்தை சேர்ந்த பெர்னார்டு பெரிங்கா ஆகிய 3 விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகின்றனர். உலகின் மிகச்சிறிய மூலக்கூறு எந்திரத்தை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. புதிய கருவிகள் உருவாக்கம் இது குறித்து நோபல் பரிசு வழங்கும் சுவீடனின் ராயல் அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கட்டுப்பாடு மிக்க இயக்கத்துடனான மூலக்கூறுகளின் வடிவமைப்பு மற்றும் தொகுப்புக்காக இந்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த வடிவமைப்புடன் ஆற்றலை சேர்க்கும் போது அது ஒரு பணியை மேற்கொள்ளும்’ என்று கூறப்பட்டு உள்ளது. சென்சார், புதிய கருவிகள் மற்றும் ஆற்றலை சேமிக்கும் கருவிகள் உருவாக்கத்துக்கு இத்தகைய மூலக்கூறு எந்திரங்கள் மிகப்பெரும் உதவியாக இருக்கும் எனவும் அகாடமி அதிகாரிகள் கூறினர். சுமார் ரூ.6 கோடி பரிசு வேதியியலுக்கான நோபல் பரிசு தொகையாக 9 லட்சத்து 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடி) வழங்கப்படுகிறது. இதை 3 விஞ்ஞானிகளுக்கும் பிரித்து வழங்கப்படும் என நோபல் பரிசு அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் டிசம்பர் மாதம் 10-ந் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் ஆஸ்லோவில் நடைபெறும் வண்ணமிகு நிகழ்ச்சியில் வழங்கப்படுகிறது. முன்னதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த யோஷினோரி ஒசுமிக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.