சித்ரா பௌர்ணமியின் சிறப்புகள்  பூமியைச் சுற்றிவரும் சந்திரன் பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப்பௌர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்ரா பௌர்ணமி நாளாகும். சித்ரா பௌர்ணமி : ✩ சித்திரை நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால், இத்தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்யும் நாளாகவும், பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதமாகவும், சித்ரா பௌர்ணமியில் பிறந்த சித்திர குப்தர் விரத நாளாகவும் கொண்டாடப்படுகிறது. ✩ சித்திரை மாதத்தில் சூரிய பகவான் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சூரியனை பித்ருகாரகன் என்றும், சந்திரனை மாத்ருகாரகன் என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்
. ✩ சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வத்திருக்கின்றார்கள். அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறப்படுகிறது. சித்ரா பௌர்ணமி வரலாறு : தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவபெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவபெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். சிவபெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது. தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள். இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச்செய்த சிவபெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் குழந்தை பாக்கிய குறையை தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும், இந்திராணியும் சம்மதித்தனர். காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என அழைக்கப்படுகிறார். இத்தகைய சிறப்புகளை உடைய சித்ரா பௌர்ணமி நாளை (21.04.2016) அனைத்து திருக்கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்படுகிறது