அரசு வழங்கும் மானியத் தொகைகள் தேவைப்படுவோருக்கு நேரடியாகச் சென்றடையுமாறு ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து இன்று பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “ஆதார் திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி அரசு மக்களுக்கு வழங்கும் மானியங்கள் நேரடியாக சென்றடையுமாறு சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படும்.
இதுவரை 98 கோடி ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 26 லட்சம் பயோ-மெட்ரிக் மற்றும் 1.5 லட்சம் இ- கேஒய்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2010-ம் ஆண்டு தேசிய அடையாள ஆணைய மசோதா மாநிலங்களவையில் இன்னமும் நிலுவையில் உள்ளது.
எனவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் ஆதாரைப் பயன்படுத்த அதற்கு சட்ட அடித்தளம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, அரசு வழங்கும் அனைத்துப் பயன்கள், மானியங்கள், சேவைகள் அனைத்தும் ஆதார் திட்டத்தின் மூலமே நிறைவேற்றப்பட சட்டம் மேற்கொள்ளப்படும்” என்றார் அருண் ஜேட்லி.
மேலும், நாடெங்கும் சில மாவட்டங்களில் உர மானியத்தை நேரடி வழங்குதல் மூலம் வழங்குவதற்கான முன்னோடித் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.மூன்றாவதாக நாட்டில் உள்ள 5.35 லட்சம் நியாய விலைக் கடைகளில் 3 லட்சம் கடைகளில் 2017 மார்ச் மாதத்திற்குள் கணிணி அடிப்படையில் தானியங்கி வசதி ஏற்படுத்தப்படும்.