இளைஞர்களுக்கான புதிய வீட்டுக் கடன் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அவ்வங்கியின் தலைமை பொதுமேலாளர் பி.ரமேஷ் பாபு நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாரத ஸ்டேட் வங்கி இளைஞர் களுக்கு உதவும் வகையில் ‘எஸ்பிஐ ப்ளக்ஸி பே’ என்ற வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன்படி, 21 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும். பெண்களுக்கு 9.50 சதவீதமும், ஆண்களுக்கு 9.55 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். இக்கடன் பெறுபவர்கள் முதல் ஐந்தாண்டுகளுக்கு வட்டி மட்டும் செலுத்தினால் போதும். அதற்கடுத்த 3 ஆண்டுகளுக்கு வட்டி மற்றும் அசல் தொகையை செலுத்த வேண்டும். அதற்கடுத்த 3 ஆண்டுகளுக்கு கடன் மற்றும் அசல் தொகையுடன் கூடுதலாக 5 சதவீதம் கடன் தவணை தொகையை சேர்த்து செலுத்த வேண்டும்.
இக்கடன் தொகையை திரும்ப செலுத்த 25 முதல் 30 ஆண்டுகள் என கால நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்பாகக் கூட கடன் தொகையை முழுமையாக செலுத்தலாம்.
இக்கடன் திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ரமேஷ் பாபு கூறினார்.
இச்சந்திப்பின் போது வங்கியின் பொது மேலாளர்கள் இந்து சேகர் தந்து, ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.