
தமிழகத்தில் இளம் மழலையர் பள்ளிகளை(பிளே ஸ்கூல்) தொடங்குவதற்கான விதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழக அரசிதழில் இதுகுறித்து கூறப்பட்டிருப்பதாவது:-
‘இளம் மழலையர் பள்ளிகளுக்கான விதி தொகுப்பு-2015’ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து 6 மாதத்துக்குள் இந்த பள்ளிகளுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். விதிகளில் கூறப்பட்டுள்ள தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், அந்த பள்ளிகளை மூட உத்தரவிடப்படும்.அங்கீகாரம் அளிப்பது மற்றும் புதுப்பித்தலுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி தான் பொறுப்பு அதிகாரி. இந்த அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன் பின்னர் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். விதிகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பள்ளிகளின் அங்கீகாரத்தை திரும்பப்பெற அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.
இந்த பள்ளி கட்டிடங்கள் சொந்த கட்டிடமாகவோ, 5 ஆண்டுகளுக்கு குறையாமல் குத்தகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமாகவோ இருக்க வேண்டும். அவை கான்கிரீட் கட்டிடங்களாகவும், சுற்றுச்சுவருடன் இருக்க வேண்டும். வகுப்பறை குழந்தைகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும்.வகுப்பறை கதவுகள், ஜன்னல்கள் எளிதில் தீப்பிடிக்காத பொருட்களாலும், வெளிப்பக்கம்திறப்பதாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகளுக்கு 2 நுழைவுவாயில்கள் இருக்க வேண்டும்.கழிவறை, குடிநீர், விளையாட்டு மைதானம் ஆகியவை சரியான முறையில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். குப்பைத்தொட்டி, அதிக ஒலி எழுப்பும் போக்குவரத்து சாலைகள், தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றின் அருகே பள்ளிகள் இருக்கக்கூடாது. பள்ளி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும்.ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் (பெண் ஆசிரியர்கள் மட்டுமே) நியமனம் செய்யப்பட வேண்டும்.
ஆசிரியை பிளஸ்-2 படித்து, டி.டி.எட்., டி.எட், மனை அறிவியல் ஆகியவற்றுக்கான பட்டயப்படிப்பு படித்து இருக்க வேண்டும் அல்லது மனை அறிவியல் (பட்டப்படிப்பு), பி.எட், குழந்தைகள் படிப்புக்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ந்தேதியுடன் 1½ வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை மட்டுமே சேர்க்க வேண்டும். பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் வயது 1½ முதல் 5½ வரை இருக்கலாம். ஒரு வகுப்புக்கு 15 குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். குழந்தைகள் அனுமதிக்கான நுழைவுத்தேர்வு எழுத்து வடிவிலோ, வாய்வழியாகவோஇருக்கக்கூடாது.பள்ளி நடக்கும் ஒவ்வொரு பகுதி நேரமும் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.ஒரு பகுதி நேரத்தில் படிக்கும் குழந்தைகள் அடுத்த பகுதி நேரத்தில் சேர்க்கக்கூடாது. காலை 9.30 மணிக்கு முன்பாக பள்ளிகளை திறக்கக்கூடாது. மாலை 4.30 மணியுடன் நிறைவு செய்துவிட வேண்டும்.பெற்றோரின் ஒப்புதலின்படி, பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு, சிற்றுண்டி வழங்கப்படவேண்டும்.
முதலுதவி பெட்டி உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். குழந்தைகள் தண்டிக்கப்பட்டால், அந்த பள்ளி மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களில் வேக கட்டுப்பாட்டு கருவி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். வாகனங்களின் பராமரிப்புகளை அடிக்கடி பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். டிரைவருடன் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.