புதுடில்லி: வரும் ஏப்ரல் முதல், அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளை, 'இ - டெண்டர்' முறையில் மட்டுமே பெற முடியும்.
அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் அல்லது சேவைகளை, இணையதள ஏலமான, 'இ - டெண்டர்' முறைப்படி பெற வேண்டுமென்ற விதிமுறை, அமலில் உள்ளது.இந்த உச்சவரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக குறைக்க வேண்டுமென, கடந்தாண்டு நடந்த செலவினங்கள் துறை சிறப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. செலவினங்கள் துறை வகுத்துள்ள விதிமுறைப்படி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு கூடுதலான மதிப்பு பொருள், சேவைகளை பெற, சி.பி.பி., எனப்படும் மத்திய கொள்முதல் இணையதளத்தில், டெண்டர்களை வெளியிட வேண்டும்.
கடந்த நிதியாண்டில், இ - டெண்டர் முறையில், 2.12 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் அல்லது சேவைகள் பெறப்பட்டன. நடப்பு நிதியாண்டில், இதுவரை, 4.71 லட்சம், இ - டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம், 3.49 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்கள் அல்லது சேவைகள் பெறப்பட்டுள்ளன.