சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. வட்டி விகிதத்தைக் குறைப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில் மத்திய அரசு முடிவெடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து, மத்திய அரசு இந்த மாத இறுதியில் முடிவெடுக்கவுள்ளது' என்றார்.
தபால் அலுவலகங்களில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்கள், பிபிஎஃப் ஆகியவற்றில் அதிக அளவு வட்டி அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக, அந்த திட்டங்களுடன் போட்டியிட்டு நிரந்தர வைப்பு நிதித் திட்டத்துக்கு முதலீட்டை ஈர்க்க முடியவில்லை என்று வங்கிகள் கவலை தெரிவித்தன.
இதைக் கருத்தில் கொண்டு, மத்திய நிதியமைச்சகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், தபால் அலுவலகங்களில் இருக்கும் சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி சேமிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாது எனத் தெரிகிறது.