தாஜ்மகாலுக்கு முறையான சாலைகள் அமைப்பதில் உத்தர பிரதேச அரசு தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள் ஒன்றாகவும், 7 உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் தாஜ்மகால் திகழ்கிறது. தாஜ்மகால், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் அமைந்துள்ளது. மொகலாய மன்னன் ஷாஜகானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இந்நிலையில், தாஜ்மகாலில் உள்ள தார் சாலைகளுக்கு பதிலாக, கற்களால் ஆன சாலைகள் அமைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை, நீதிபதி தாக்கூர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
அப்போது, அவர்கள் தாஜ்மகால் கட்டினார்கள், உங்களால் அதற்கு ஒழுங்காக சாலைகள் அமைக்க முடியவில்லை என்று உத்தர பிரதேசம் அரசுக்கு நீதிபதி தாக்கூர் கண்டனம் தெரிவித்தார்.
விசாரணையின் போது நீதிபதி கூறியதாவது:-“சுத்தியல், உளியைக் கொண்டு கை வேலைப்பாடுகளால் 17-ம் நூற்றாண்டில் தாஜ்மகால் கட்டப்பட்டது. ஆனால், உங்கள் அரசால் அதற்கு நவீன தொழில்நுட்பத்தை கொண்டும் சாலை அமைக்க முடியவில்லை.
உங்கள் பொறியாளர்கள் மோசமான சாலைகள் போட்டுள்ளதற்காக வெட்கப்பட வேண்டும். மேலும், முழுமையடையாத வேலைக்கு கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தார் சாலைகளால் வெயில் காலங்களில் சுற்றுச் சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும், கற்களால் ஆன சாலைகள் 50 வருடம் தாங்கக் கூடியது என்றும் உத்தரபிரதேசம் அரசு சார்பில் வாதிடப்பட்டது