சிவகங்கை: ''அரசு அலுவலர், ஆசிரியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சம்பளக்குழுவை உருவாக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.
சிவகங்கையில் அவர் கூறியதாவது:அமைச்சு, தொழில்நுட்ப, சார் நிலை, களப்பணியாளர், ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களைதல் உட்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்டமாக இயக்கம் நடத்தினோம். அரசு சார்பில் சமரச பேச்சு நடத்தி, 'கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்' என உத்தரவாதம் அளிக்கப்பட்டது; இதை நம்பி போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன் வரவில்லை. அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்க உள்ளோம்.அரசு அலுவலர், ஆசிரியர் பிரச்னைகளை தீர்க்க மாநில தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். ஊதியக்குழுவை ஏற்படுத்த வேண்டும். அரசு அலுவலர் குடும்ப நல பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த வேண்டும். கல்வி, திருமண உதவி, வீட்டுக்கடன்களை தற்போதைய நடைமுறைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்.
கருணை அடிப்படை நியமனம், பணி வரன்முறையில் உள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர், ஊராட்சி செயலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.