தபால் துறை, அக்டோபர் 11-ஆம் தேதி, உலக பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடவுள்ளது. இந்தக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, பெண் குழந்தைகளுக்கான தபால் சேமிப்பு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான சிறப்பு முகாமை நடத்தவுள்ளது.
இதை முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள தலைமைத் தபால் அலுவலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த தினத்தில் வங்கிக் கணக்கு தொடங்கும் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.
அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை தேசிய தபால் வாரத்தை தபால் துறை கொண்டாடவுள்ளது. இதில் அக்டோபர் 10-ஆம் தேதி வங்கி சேமிப்பு தினமாகவும், அக்டோபர் 11-ஆம் தேதி உலக பெண் குழந்தை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
பொதுமக்களுக்குத் தேவையான தபால் சேவைகளைச் செய்வதில் தபால் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. பாலின பாகுபாட்டுக்கான நிதி வசதி என்ற தகவலை மத்திய குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பரப்புவதில் தபால் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது