10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் வங்கியில் தனியாக கணக்கு தொடங்கி, அதனை பயன்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. சிறுவர்கள் வங்கி கணக்கை தொடங்க ரிசர்வ் வங்கி வழிகாட்டல்களை வெளியிட்ட பின்னர் 18 வயதுக்கு குறைவான சிறுவர் சேமிப்புக் கணக்கை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. "'பெலி உடான்' என்ற திட்டத்தின்படி 10 வயதில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனி கணக்கு வழங்கப்படும். அவர்கள் தனியாகவே வங்கிக் கணக்கை இயக்கலாம். 'பெலா காதம்' என்ற மற்றொரு திட்டத்தில் 18 வயதுக்கு கீழானவர் தந்தை அல்லது தாய் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் இணைந்து கூட்டுக் கணக்கு தொடங்கலாம்." என்று பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு தொடங்கும் சிறுவர்களுக்கு சிறப்பு பாஸ்புக், காசோலை புத்தகம், புகைப்படம் ஒட்டப்பட்ட ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவை வழங்கப்படும். வரையறுக்கப்பட்ட அளவு பணம் பரிமாற்றம் செய்ய இணையதள வங்கி வசதியும், மொபைல் வங்கி வசதியும், வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள வங்கி மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரையில் பண பரிமாற்றம் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபல் வங்கி மூலம் ஒரு நாளைக்கு ரூ. 2 ஆயிரம் வரையில் பணபரிமாற்றம் செய்ய முடியும். இத்திட்டம் சிறுவர்களுக்கு சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும், பணத்தை எப்படி கையாள்வது என்ற அறிவை இளம் வயதிலேயே பெற வாய்ப்பாக இருக்கும். என்று பாரத ஸ்டேட் வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா குறிப்பிட்டுள்ளார்.