ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனக்கோரி, நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த பவுசிநேசல் பேகம், புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 18 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சசிதரன், ஆசிரியர் பணி நியமனத்திற்கு கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம். ஆனால், பணி நியமனங்கள் வழங்கக்கூடாது என நேற்று (3ஆம் தேதி) உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் சோமையாஜி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால் தமிழக அரசின் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க மறுத்துவிட்ட 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவு எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனவே, தமிழக அரசு நாளை மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.