புதுடில்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு பாடதிட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடுத்து, அடுத்த மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு, தேர்வாணையத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் அதிகாரிகளை தேர்வு செய்ய, யூ.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது. இதில், வெற்றி பெறும் இளைஞர்கள், பயிற்சிக்குப் பின், நேரடியாக உயர் பதவிகளில் பணியமர்த்தப் படுகின்றனர். இந்நிலையில், யூ.பி.எஸ்.சி., நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில், சமீபத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 'சிசாட்' எனப்படும், புதிய தேர்வு முறை, அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு, தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த புதிய முறையை உடனடியாக நீக்கக் கோரி, தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர், ஜிதேந்திர சிங்கை சந்தித்து, இதுகுறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, இந்த விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டப்படும் வரை, சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை ஒத்தி வைக்குமாறு, யூ.பி.எஸ்.சி.,க்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்த மாதம் நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 'விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என, அமைச்சர், ஜிதேந்திரா சிங் உறுதிளித்துள்ளார்.