தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிப் பெயருடன் மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் போன்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை நீக்குவது குறித்து தீவிர பரசீலனை செய்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கத்தின் தலைவர் வி.வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில்: மாநில வாரியான பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன், ஓரியண்டல் போன்ற நான்கு வகையான பாடத் திட்டங்கள் தமிழகத்தில் இருந்தன.
அவையனைத்தையும் களைந்து ஒரே கல்வி முறையை செயல்படுத்தும் நோக்கில் கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக அரசு சமச்சீர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. அந்த முறைதான் தற்போது நடைமுறையில் உள்ளது.
அரசுப் பள்ளிகள் மற்றும் இதர அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே கல்வி முறைதான் செயல்பாட்டில் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளிகளை விட தங்களது பள்ளியின் கல்வி முறை சிறப்பானது என்பதை தனியார் பள்ளிகள் வெளிப்படுத்தி வருகின்றன.
எனவே, தனியார் பள்ளிகள் தங்களது பள்ளி பெயருடன் சேர்த்து மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். அந்த வார்த்தைகளை நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வார்த்தைகளை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது