நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 7.7.2017 திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு பெரும் புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது. செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட், புதன்கிழமை பொருளாதார ஆய்வறிக்கை, வியாழக்கிழமை பொது பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு பிரச்சினையை விவாதத் துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம், மத்திய அமைச்சர் நிகில் சந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் ஆகியவை குறித்தும் மத்திய அரசிடம் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. இதனிடையே பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து காங்கிரஸின் உயர்நிலைக் கூட்டம் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.