கர்நாடகத்தில் 2008-09 ஆம் ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மூன்று கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு (டி.எட்.) படிக்கிறோம்.
கடந்த 2008-09 ஆம் கல்வியாண்டில் படிப்பில் சேர்ந்தோம். இரண்டாமாண்டு தேர்வு எழுதும் நேரத்தில், தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு அரசாணை வெளியிட்டது.
அதில், 2008-09-ஆம் கல்வி ஆண்டு முதல் வெளி மாநிலங்களில் ஆசிரியர் பட்டயப் படிப்பு படிக்கும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க மாட்டோம். தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 2002-ஆம் ஆண்டு முதல் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. அதனால், அந்த பாடத் திட்டத்துக்கும், தமிழகப் பாடத் திட்டத்துக்கும் அதிகளவு வித்தியாசங்கள் உள்ளன. எனவே, வெளிமாநிலத்தில் பயிலும் மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டது.
நாங்கள் 2008- 09-ஆம் கல்வியாண்டில் சேர்ந்து விட்டோம். எங்களின் இரண்டாவது ஆண்டு படிப்பை முடிக்கும் நேரத்தில் தமிழக அரசு அவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவினால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே, அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சுரேஷ்குமார் ஆஜராகி, மனுதாரர் 2008-ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்ந்து விட்டனர். ஆனால், தமிழக அரசு 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் வெளிமாநிலத்தில் படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க மாட்டோம் என உத்தரவிட்டது.
இது, 2008-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு எவ்வாறு பொருந்தும். அதனால், அந்த கல்வியாண்டு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதாடினார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் எஸ்.கோமதி நாயகம் ஆஜராகி, கல்வியின் தரத்தை உயர்த்தவே புதியப் பாடத்திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதர மாநிலங்களை விட தமிழகம் கல்வித் தரத்தில் மேலோங்கி உள்ளது. இதனால், இதர மாநிலங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழை பரிசீலிக்க முடியாது என வாதாடினார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அரசாணைக்கு இந்த நீதிமன்றம் உடன்படுகிறது. அந்த அரசாணை 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர்கள் 2008-09 ஆம் கல்வி ஆண்டிலேயே இதர மாநிலத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்புக்காக சேர்ந்து விட்டனர்.
அவர்கள் இரண்டாவது ஆண்டில் 8 மாதங்கள் படித்த பிறகு தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகதான் அரசு அவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அந்த அரசாணையை ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், அந்த கல்வியாண்டு மாணவர்களின் சான்றிதழ்களை பரிசீலிக்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர்களின் சான்றிதழ்களை தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.