புதுடில்லி: இந்தியாவின் பஞ்சாப் பல்கலை கழகம் ஆசியாவின் சிறந்த பல்கலைகழகங்களின் வரிசையில் 32-வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய நாடுகளின் பல்கலை கழகங்களின் 2014-ம் ஆண்டு தரவரிசைப்பட்டியல் குறித்த ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இதில் ஆசியாவில் உள்ள 100 பல்கலைகழகங்களில் இந்தியாவை சேர்ந்த 10 பல்கலைகழகங்கள் இடம் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் பல்கலைகழகங்களை பொறுத்த வரையில் அதன் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது. சீனா முந்தைய ஆண்டைய காட்டிலும் தன்னுடைய ரேங்கிங்கை அதி்கரித்துள்ளது. இந்திய பல்கலைகழகங்களை பொறுத்தவரையில் பஞ்சாப் பல்கலைகழகம் 32-வது வரிசையிலும் கான்பூர் ஐஐடி நிறுவனம் 45-வது இடத்தையும், பிடித்துள்ளது. இந்தாண்டு புதிய வரவாக இணைந்துள்ள ஜதாவ்பூர் பல்கலை கழகம் 76 -வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து அலிகர் முஸ்லீம் பல்கலைகழகம், நேருபல்கலைகழகம் ஆகியவை முறையே 80 மற்றும் 90-வது இடங்களை பிடித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தரவரிசைப்பட்டியலில் இணைவதற்கு முழு மனதுடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தி்ன் உயர் கல்வித்துறை செயலாளர் அசோக்தாகூர் கூறுகையில் உலக பல்கலைகழக தர வரிசை பட்டியலில் தற்போது நேர்மையான இறுதிகட்ட தீர்மானத்தை அடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தர வரிசைப்பட்டியல் வெளியிடுவதன் மூலம் இந்திய பல்கலைகழகங்களின் தரத்தை அதிகரிக்கவும் உலக அளவில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்று ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.