தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர, பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) இணையதளத்தில் 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்களை தேர்வுசெய்யும் பொருட்டு ஆண்டுதோறும் யு.ஜி.சி., நெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில், உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், நெட் தேர்வில் மாற்றம் கொண்டுவர, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது. இதற்கென, www.ugc.nic.in என்ற யு.ஜி.சி., இணையதளத்தில் 10 கேள்விகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், உயர் கல்வி ஆசிரியரை அடையாளம் காண நெட் தேர்வு போதுமானதாக உள்ளதா, இந்தத் தகுதித் தேர்வில் ஒருவர் இத்தனை முறைதான் பங்கேற்க வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமா, தேர்வில் பங்கேற்க வயது வரம்பு கொண்டுவர வேண்டுமா, தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இக்கேள்விகளுக்கு, கல்லுாரி ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க யு.ஜி.சி., கேட்டுக்கொண்டுள்ளது. ஒவ்வொரு கேள்விக்கு அருகிலும் ஆம், இல்லை என்ற இரண்டு பதில்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பதிலில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, சமர்ப்பிப்பு பட்டனை அழுத்தினால் போதும்; கருத்து பதிவு செய்யப்பட்டு விடும். கருத்துக்கள் மற்றும் தனிக்குழு வழங்கும் பரிசீலனையின் அடிப்படையில் தேர்வில் மாற்றம் கொண்டு வர யு.ஜி.சி., முடிவு செய்துள்ளது.
யு.ஜி.சி., துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது:வரும் நெட் தேர்வை மொத்தம் 7.5 லட்சம் பேர் எழுதவுள்ளனர். தேர்வில் அப்ஜெக்டிவ் வகை வினாக்களுக்கு மாறாக, சப்ஜெக்டிவ் வினாக்கள் கேட்க அதிக கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதேபோல், தேர்வில் மாற்றம் கொண்டுவர மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், நெட் தேர்வில் சில மாற்றங்கள் கொண்டுவர யு.ஜி.சி.,யும் முடிவு செய்துள்ளது. இதற்கென தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, தகுதித் தேர்வில் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இக்கருத்துகள் மற்றும் குழு முடிவுகளின் அடிப்படையில், நெட் தேர்வில் மாற்றம் கொண்டுவரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.