சென்னை, மே 1-
சென்னை மணலியில் உள்ள ’தமிழ்நாடு பெட்ரோ ப்ராடக்ட்ஸ் லிமிட்டெட்’ நிறுவனத்தின் கனரகப் பிரிவில் பணியாற்றி வந்த பி.அன்பு ராஜாராமன் என்பவர் அந்த நிறுவனத்தின் தொழிற்சங்க துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.
அந்த நிறுவனத்தில் வேலை செய்தபடியே, வர்மம், சித்த மருத்துவம் மற்றும் யோகா தொடர்பாக அவர் ஆராய்ச்சி செய்து வந்ததாக குற்றம் சாட்டிய நிர்வாகம், அவரை இடைக்கால பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தொழிலாளி 2013-ம் ஆண்டு சென்னை ஐகோர்ர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில், துறை ரீதியான விசாரணை முடிந்து, தன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்துக்கு சென்று, தனது கடமைகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அன்பு ராஜாராமன் கோர்ட்டிடம் அனுமதி கோரினார்.
அவர் தொழிற்சாலைக்குள் வந்தால் தொழிற்சாலையின் அமைதிக்கு குந்தகம் நேரிடும் என்று தொழிற்சாலையின் தரப்பில் விளக்கம் அளித்து எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த ஐகோர்ட் நீதிபதி டி.ஹரி பரந்தாமன், ‘வாதியின் மீது நிர்வாகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவர் வர்மம், சித்த மருத்துவம் மற்றும் யோகா தொடர்பாக ஆராய்ச்சி செய்து வந்ததாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவரத்தை தூண்டும் விதமாக அவர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், தொழிற்சங்க அலுவலகத்துக்குள் அவர் நுழையக் கூடாது என்று தடுப்பது, தொழிற்சங்க சட்டம் 19(1)(a) to (c) அளித்துள்ள அடிப்படை உரிமையை மறுப்பதாகும்’ என்று கூறி தொழிற்சாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர் மனுவை தள்ளுபடி செய்து நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளித் தோழர்கள் இந்த ஆண்டின் மே தினத்தை இரட்டிப்பு மகிழ்வுடன் கொண்டாட இதைவிட ஒரு நல்ல செய்தி வேறு என்ன வேண்டும்?
Source : http://www.maalaimalar.com/