சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு தாமதத்தால், அம்மாணவர்கள் பி.இ.,க்கு விண்ணப்பிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தேர்வு முடிவிற்குப் பின், மதிப்பெண் பட்டியலை அண்ணா பல்கலைக்கு அனுப்பினால் போதும் என, பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்தார்.
தமிழக பாடத்திட்டத்தின் கீழ் நடந்த பிளஸ் 2 தேர்வின் முடிவு, நேற்று வெளியானது. எனினும், மதிப்பெண் பட்டியல் வழங்க ஒரு வாரம் பிடிக்கும் என தெரிகிறது. ஆனால் பி.இ.,க்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதியுடன் முடிகிறது. விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் நகலையும் இணைக்க வேண்டும் என அண்ணா பல்கலை கூறுகிறது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவு இம்மாத இறுதியில்தான் வரும் என கூறப்படுகிறது. இதனால் அம்மாணவர்கள், பி.இ.,க்கு விண்ணப்பிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த பிரச்னை குறித்து அண்ணா பல்கலை பி.இ. சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: ஸ்டேட் போர்டு மாணவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலை விண்ணப்பத்துடன் இணைத்தால் போதும்.
கலந்தாய்வுக்கு வரும்போது, அசல் மதிப்பெண் பட்டியலை கொண்டு வர வேண்டும். சி.பி.எஸ்.இ., மாணவர்கள் பி.இ.க்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்களை, தனியாக பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளோம். தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் பட்டியல் நகலை கவருக்குள் வைத்து, அதன்மேல் பி.இ. விண்ணப்ப எண்ணை குறிக்க வேண்டும்.
நாங்கள் குறிப்பிட்ட விண்ணப்ப எண்ணை தேர்வுசெய்து, அதற்கான மதிப்பெண்ணை சேர்த்து விடுவோம். எனவே சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.