செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணம் எவ்வளவு என அறிவிக்கும் திட்டத்தில் செல்போன் எண்களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து நுகர்வோ ரும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் மொபைல் எண்ணை, இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் மின் துறையின் வருவாயைப் பெருக்கவும், மின்சாரத் துறையை நவீனப்படுத் தவும், தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள் ளது. இந்த திட்டத் துக்கு மத்திய அரசிலிருந்து ஆர்-ஏ.பி.டி.ஆர்.பி. திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சுமார் ரூ.70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் தவிக்கும் மின் வாரியத்தின் வருவாயை உயர்த்த எடுக்கப்படும் பல நடவடிக்கைகளில் ஒன்றாக, மொபைல் போன் மூலம் மின் கட்டண விவரங்களை அனுப்பும் திட்டத்தை மின் வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழகத்தில் உள்ள 2.3 கோடி மின் நுகர்வோரில், விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சார இணைப்புகள் பெற்றுள்ளோரைத் தவிர, மற்ற அனைவருக்கும், மின் கட்டணம் குறித்த விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. முதலில் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில், பணம் கட்டும்போதே, செல்போன் எண்ணைப் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டது. இதில் மின் ஊழியர்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்பட்டதால், வெளியே தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
இதிலும் ஏராளமானோர் மொபைல் போன் எண்ணைப் பதிவு செய்யவில்லை. பெரும்பாலானோர் தங்கள் மின் கட்டணத்தை இணையதளம், தபால் அலுவலகம், வங்கி ஏ.டி.எம். மையங்கள் மற்றும் தனியார் ஏஜெண்டுகள் மூலம் கட்டி விடுவதால், அவர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது.
இணையதளத்தில் புதிய வசதியை, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மின் நுகர்வோர் http://www.tangedco.gov.in என்ற இணையதள முகவரியில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையதளத்தில், பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப்ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
மின் துறை கணக்கீட்டாளர்கள், தங்களது கையடக்க கருவி மூலம் மின் கட்டண பட்டியல் எடுத்ததும், அவை மின் வாரிய இணையதள சர்வரில் ஏற்றப்படும். பின்னர் முதலில் பதிவு செய்யப்படும் ஒரு லட்சம் எண்களுக்கு, தினமும் சர்வரிலிருந்து மொபைல் போன் குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் அனுப்ப தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்னும் ஒரு வாரத்திற்குள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.