மே 7 : நமது தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றிய இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் பிறந்த தினம் இன்று...


இரவீந்தரநாத் தாகூர் - இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர் , புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றாவர்.

இரவீந்தரநாத் தாகூர் மே 7, 1861 ல் பிறந்தார்.. புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைப்பர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இரவீந்திரநாத் தாகூர் தேவேந்திரநாத்தின் புதல்வர்.. இவர் தாயார் பெயர் சாரதா தேவி. இவர் பிறந்த வம்சத்தில் பூமகளும் நாமகளும் கூடியே வாழ்ந்தனர். செல்வமும் கல்வியும் இலங்கும் ஒப்பற்ற வம்சம். இவருடைய சகோதரர்களில் ஒருவரான துவேந்திரநாத் உபநிடதங்களைக் கற்ற பண்டிதர், இன்னொருவர் ஓவியக் கலையில் புகழ் பெற்றவர், ஒரு சகோதரர் அரசாங்கத்தில் கலெக்டெராகப் பணியாற்றினார். இவருடைய சகோதிரியின் புத்திரர்கள் அபினீந்திர நாதரும், சுகனேந்திர நாதரும் சித்திரக் கலையிலும் சிற்பக் கலையிலும் நாடெங்கும் புகழ் பெற்றவர்கள். இத்தகைய குடும்பத்தில் பிறந்த இரவீந்திரர் இசை, கலை, காவியம் ஆகிய துறைகளில் மிகவும் தேர்ச்சியுடையவர்.


இரவீந்திரருக்குப் பள்ளியில் உபாத்தியாயரின் உரையில் மனம் நாடவில்லை. இவர், பள்ளிக்குச் செல்வதைத் துன்பமே எனக் கருதினார். இயற்கை அன்னையும், கலைவாணியும் இவருக்கு மறைந்து நின்று கல்வியை போதித்தனர். இவர் மனம் வங்காள பாஷையிலும், ஸ்ம்ஸ்கிருத பாஷையிலும் லயித்து நின்றது. .


தான் ஒரு பாரிஸ்டர் (Barrister) ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்Brighton, Londonல் ஒரு பள்ளியில் 1878ல் சேர்ந்தார். பிறகு லண்டன் சர்வகலாசாலையில் படித்தார். ஆனால் பட்டம் பெறாமலேயே1880ல் வங்காளத்திற்குத் திரும்பிவிட்டார். 1883ஆம் வருடம் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழைந்தைகள் பிறந்தன. ஆனால் நான்கு குழைந்தைகள் வாலிபப் பருவம் அடையுமுன்பே இறந்து விட்டனர். 1902ல் மனைவி இறந்து போனார்.


1895ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும்,பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.


1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha)சாந்தினிகேதனுக்குக் குடியேறினார்.அங்கு அவர் ஒரு ஆசரமத்தை நிறுவினார். அது ஒரு பிரர்த்தனைக் கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலையுடன் மரங்களும், செடிகளும் கொண்ட பூஞ்சோலை யாக மிளிர்ந்தது.


1913ல் அவர் நோபெல் பரிசு இலக்கியத்திற்காக தன்னுடைய படைப்புகளுக்காகப் பெற்றார். 1915ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தாகூருக்கு Knighthood பட்டம் அளித்தது.


1921ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆம்பித்தார்.


1905ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர நாதரும் "அடிமை ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் கூறுகின்றார்..


இக்காலத்தில்தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அடிமையையும் கண்டதுடன் அவர்கள் அடைந்திருந்த தாழ் நிலையையும் கண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.


1919ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயரால் அளிக்கப்பட்ட "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன்,உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்திருக்கின்றார்.




1930ஆம் ஆண்டு ஜூன் மாதம் H.G. Wells அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று Dr. Mendel என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.

இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877ல் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20வது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki)எழுதினார். அவருடைய 60 வயதில் டிராயிங் மற்றும் பெயிண்டிங் செய்ய ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.

1878 முதல் 1932 முடிய இரவீந்திரர் ஐந்து கண்டங்கலில் முப்பத்து ஒரு தேசங்களுக்கு சென்றிருக்கிரார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி மெட்டும் போட்டுள்ளார். அதில் இரண்டு பாடல்கள் இந்தியா, மற்றும் பங்களா தேசத்தின் தேசிய கீதமாக ஆயின.


நீண்ட காலம் நோய்வாய்பட்டு இருந்து 7 ஆம் தேதி ஆக்ஸ்ட் 1941ஆம் வருடம் உயிர் நீத்தார்.

Courtesy : http://www.kalviseithi.net/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி