நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம். இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும்.
மனஅழுத்தம்
உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மௌனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே எந்த செயலையும் அழுத்தமின்றி செய்ய பழகிகொள்ள வேண்டும். அவ்வாறு பழகிக்கொண்டாலே இதயத்தில் அழுத்தமோ, டென்ஷனோ ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
முறையற்ற உணவுப் பழக்கம்
முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது. தோல் நீக்கிய சிக்கன் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்..
சீரான ரத்த ஓட்டம்
இதயநோய்கள், மாரடைப்பு இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, வைட்டமின் இ, சி, போன்றவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன. ஒவ்வொருவரும் ஒரு நாளில் காய்கறி அல்லது பழங்களின் ஜூஸ் குடிப்பதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்.
புகைப்பதை நிறுத்துங்கள்
24 மணி நேரமும் ஓய்வே எடுக்காமல் நம்மை பாதுகாக்கும் இதயத்தினை பாதுகாக்க நினைத்தால் புகைப்பதை நிறுத்துங்கள். ஏனெனில் இதயத்தின் முக்கிய எதிரி புகைதான். எனவே புகையை விட்டொழியுங்கள். புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள்.
சிரித்து மகிழுங்கள்
எப்போதும் சிடுசிடு என்று டென்ஷனாக இருக்காமல் சந்தோஷமாக இருங்கள். நம்முடைய இதயத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.