நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, "நாக்" குழுவின் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, நாடு முழுவதும் நிகர்நிலை கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு பாடத் திட்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.இதில் 44 பல்கலைகளின் தரம், மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதில், தமிழகத்தின், 16 நிகர்நிலை பல்கலைகளும் அடக்கம். இப்பல்கலைகள், தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது குறித்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, இம்மாதம், 11,12 ஆகிய தேதிகளில், யு.ஜி.சி., கூட்டம் நடப்பதாக இருந்தது.ஆனால், கூட்டத்தை நடத்தும், யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சிங் சாந்துவின் நியமனம்குறித்த சர்ச்சை எழுந்ததால், "மார்ச் 25, 26, 27 தேதிகளில் கூட்டம் நடக்கும்" என அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து, யு.ஜி.சி., செயலர் நியமனத்தை, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அங்கீகரித்ததால், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, யு.ஜி.சி., கூட்டம் நடப்பதுஉறுதியாகி உள்ளது. இக்கூட்டத்தில், ஏற்கனவே பல்கலைகளை அங்கீகரித்த குழுவினர் அளித்த அறிக்கைகள், பல்கலைகளிடம் இருந்து, யு.ஜி.சி.,யால் பெறப்பட்ட அறிக்கைகள்ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு அதன் பின், முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.