சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவன் 300 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறுகிறார்.
சென்னை வேளச்சேரி நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஸ்ரீராம் பாலாஜி (12). இவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திர வித்யாலயத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், 1900-ஆம்ஆண்டு முதல் 2200-ஆம் ஆண்டு வரையுள்ள நாள்களின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறார்.
இது குறித்து, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீராம்பாலாஜியின் தந்தை வேலுச்சாமி கூறியது:
ஸ்ரீராம் பாலாஜி கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முயற்சியில்ஈடுபட்டு வருகிறான். அவனுக்கு இந்தத் திறமை இருப்பது கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பரில் எங்களுக்கு தெரியவந்தது. அப்போது 2000-ஆம் ஆண்டு முதல் 2038-ஆம் ஆண்டு வரையுள்ள 38 ஆண்டுகளுக்கான கிழமைகளை பார்க்காமல் கூறினான். பின்னர்,கடந்த 2013-ஆம் ஆண்டு 200 (1900-2100) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொன்னான். தற்போது 300 (1900-2200) ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்கிறான் என்றார்.
ஸ்ரீராம் பாலாஜி கூறுகையில், "செல்போனில் உள்ள காலண்டரைப்பார்த்து தேதிகளுக்கான கிழமைகளை கற்றுக் கொண்டேன். தினமும் 3 மணி நேரம் வரை செல்போனில் உள்ள காலண்டர் பார்ப்பேன். தற்போது 300 ஆண்டுகளின் கிழமைகளை பார்க்காமல் சொல்வேன்' என்றார்.