பி.எஸ்.என்.எல்., தரைவழி போனுக்கான கட்டணம், சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாதக் கட்டண ரசீது மூலமே, கட்டண உயர்வு விவரம், வாடிக்கையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இலவச அழைப்புகள்:
பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போன்களுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவச அழைப்புகள் அளிக்கப்பட்டு உள்ளது. இது, பி.எஸ்.என்.எல்., மற்றும் பிற நிறுவன போன்களுக்கு செய்யும் அழைப்புகள் அனைத்துக்கும் பொருந்தும்.இந்த நடைமுறையில், கடந்த ஆண்டு திடீரென, மாற்றம் செய்யப்பட்டது. 'பி.எஸ்.என்.எல்., போன்களுக்கு போன் செய்தால் மட்டுமே, இலவச அழைப்பு சலுகை வழங்கப்படும். வேறு நிறுவனங்களின் போன்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படும்' என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், மாற்றம் செய்தது. பி.எஸ்.என்.எல்., போனில் இருந்து, எந்த நிறுவன போனுக்கு பேசினாலும், 180 வினாடிகள், ஒரு அழைப்பாக கணக்கிடப்பட்டது. தற்போது, வேறு நிறுவன போன்களுக்கு செய்தால், '120 வினாடிகள் ஒரு அழைப்பு' என மாற்றி உள்ளனர்.
அதிருப்தி:
இதனால், பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் போனில் இருந்து, பிற நிறுவன போனுக்கு செய் யும் அழைப்பின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் செய்துள்ள, கட்டண உயர்வு, வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய ஒருங்கிணைப்பாளர், சடகோபன் கூறியதாவது:இந்த மாதம் வந்த, பி.எஸ்.என்.எல்., கட்டண ரசீது மூலம் தான், கட்டண உயர்வு விவரம் தெரியவந்தது. இது, வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல்., நிறுவனம், அளித்த புத்தாண்டு பரிசு. முன் அறிவிப்பின்றி, அமலுக்கு வரும் இதுபோன்ற கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கிறது.பிற போன் நிறுவனங்கள் பல்வேறு கட்டண சலுகையை அளித்து வருகின்றன. ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், கட்டண உயர்வை அமல்படுத்துவது, பி.எஸ்.என்.எல்., இணைப்பில் இருந்து வாடிக்கையாளர்களை, வெளியேற்றும் செயலாகவே கருதுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இணைப்பு கட்டண சலுகை:
ஒரு புறம், சத்தமில்லாமல், போன் கட்டணத்தை உயர்த்தினாலும், இணைப்பு கட்டண சலுகையை பி.எஸ்.என்.எல்., சென்னை நிறுவனம் அளித்துள்ளது. இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:ஓர் ஆண்டு கட்டண திட்டத்தின் கீழ், லேண்ட் லைன் இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு, பிராட்பேண்ட் இணைப்புக்கு 250 ரூபாய்; போன் இணைப்புக்கு நகர்புறத்தில், 750 ரூபாய் கிராமப்புறங்களுக்கு, 550 ரூபாய் இணைப்புக் கட்டண சலுகை அளிக்கப்படும். 'கோம்போ' திட்டத்தில், நகர்ப்புற இணைப்புகளுக்கு, 500 ரூபாய்; கிராமப்புறங்களுக்கு, 300 ரூபாய் இணைப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்