
கொள்ளு என்றும், காணம் என்றும் அழைக்கப்படும் பயறு ஒரு காலத்தில் நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமங்களில் கூட ஒதுக்கப்பட்ட பயறாகும். குதிரை தின்பதை மனிதன் தின்பதா என்று வெறுத்து ஒதுக்கியவர்கள் ஏராளம். ஆனால் இன்று ஊட்டச்சத்து நுண்ணுயிர்ச்சத்து ஆகியவை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், நகர்களில் உள்ள பெரும் அங்காடிகளில் (மால்கள்) கூட இவை கட்டம் கட்டி விற்கப்படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பைக் கரைப்பதில் இதற்கு ஈடிணையான பயிறு எதுவும் இல்லை. இளைத்தவன் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அவன் உடல் பெருக்கும் என்றும், ஊளைச்சத்து உடையவர்கள் கொள்ளைச் சேர்த்துக் கொண்டால் ஊளைச் சத்துக்கு காரணமான கொழுப்பு கரைந்து விடும் என்பது அன்றைய நம்பிக்கையாகும். அந்த அடிப்படையில் உருவான சொலவடைதான் இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு . புரதம் நிறைந்த தானியம் கொள்ளு. மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரிபார்க்கவும் புரதம் மிகவும் அவசியமாகும். புரதத்தில் மேம்பாடான புரதம், தாழ்வான புரதம் என்று இரண்டு வகை உண்டு மேம்பாடான புரதம் இறைச்சி உணவுகளில் இருந்து கிடைப்பது. இந்த நன்மையை அவற்றில் கிடைக்கும் கொலஸ்ட்ரால் பாதித்து விடுகிறது. காய்கறிகளில் இருந்து கிடைக்கும் புரதம் தாழ்வான புரதமாகும்.. ஆனால் கொள்ளு, சோயா ஆகியவற்றில் கிடைக்கும் புரதம் மேம்பாடான புரதமாகும். சைவ உணவுக்காரர்களுக்கு தேவையான மேம்பாடான புரதத்தை கொள்ளு அள்ளித்தருகிறது. கொள்ளு சூட்டைக் கிளப்பி விடும் என்று ஒரு வாதமும் வைக்கப்படுகிறது. கொள்ளு ஒரு வெப்பமான உணவுதான். ஆனால் கொள்ளு வளர்சிதை மாற்றத்தை(ஆநுகூஹக்ஷடீடுஐளுஆ) வேகமாக நடத்துவதால் இந்த வெப்பம் உருவாகிறது. எனவே கொழுப்பை குறைக்க கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. குதிரைக்கு கொள்ளு கொடுப்பதின் பின்னணியும் இதுதான். குதிரையின் உடம்பில் அநாவசியமாக சதை இருந்தால் அதன் எடை கூடிவிடும், அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு உண்ணும் குதிரைகள் சிக்கென்று திடமாக இருப்பதால் அவை விரைந்து ஓடமுடியும். என்வேதான் அன்று படைகளில் இருந்த குதிரைகளுக்கும், பந்தய குதிரைகளுக்கும் கொள்ளு ஒரு கட்டாய உணவாக இருந்து வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கொள்ளு ஒரு சகலரோக நிவாரணியாக கருதப்படுகிறது. மூல நோய்க்கும், மூட்டு நோய்களுக்கும், இருமல், சளி தொந்தரவுகளை களையவும், காய்ச்சலை விரட்டவும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. அல்சர் என்கிற குடல் புண்ணை குணப்படுத்தவும் சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், பெண்களுக்கு மாதவிடாயின் போது அதீத ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் கொள்ளு பயன்படுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குன்யா காய்ச்சல் கண்டவர்களுக்கு கொள்ளு வேகவைத்த தண்ணீரில் சூப் வைத்து கொடுத்தால் நோய் கட்டுப்படுத்தப்படுவதுடன் விரைவில் குணமடைய வாய்ப்பும் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற தண்ணீரை வெளியேற்ற கொள்ளு பயன்படும். கொள்ளு வேகவைத்த நீர் உடலில் உள்ள நீரை சுத்திகரிப்பதுடன், அவற்றில் கலந்துள்ள நச்சுத்தன்மையையும் அது களைந்து விடும். எலும்புக்கும், நரம்புக்கும் நல்ல உரமளிக்கும் உணவு கொள்ளு.இதில் இரும்பு, கால்சியம், மாலிப்டினம் மற்றும் பல பீனால்களை உள்ளடக்கியது. இவை தீங்கு விளைவிக்கக் கூடிய வாயுக்களை தடுத்து நமது உடல் உடலுறுப்புகளுக்கு மற்றும் உயிரணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. முளை கட்டிய கொள்ளு வைட்டமின் என்று அழைக்கப்படும் உயிர்ச்சத்து பொருட்களாகிய ஏ, பி, மற்றும் சி ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. கொள்ளை வேக வைத்த நீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து சூப்பாக குடிக்கலாம். வேகவைத்த கொள்ளை சாலட் போல் சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்த்து உண்ணலாம். கோழி, மீன் தவிர்த்த இறைச்சி சாப்பிடுவோர் அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம்.. கொழுப்பை உடலில் தங்கவிடாமல் கொள்ளு பாதுகாக்கும். நல்ல இறைச்சி விருந்து உண்ணவிருப்போர் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால். அடுத்த வேளைகளில் சாப்பிடப்போகும் கொழுப்பு நிறைந்த உணவில் உள்ள கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.