ஆதாரம் இருந்தால், வழக்கு விசாரணைக்காக குற்றம் சாட்டப்படாத, குற்றப் பத்திரிகையில் இடம் பெறாத நபரைக் கூட நீதிமன்றம் விசாரணைக்கு அழைக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இதனை தெரிவித்துள்ளது.
கிரிமினல் சட்டப் பிரிவு 319-ஐ விளக்கிய நீதிபதிகள், இந்தச் சட்டப்பிரிவு எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கையில்) குற்றப்பத்திரிகையில் இடம் பெறாத நபரைக் கூட ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தும் அதிகாரத்தை விசாரணை நீதிமன்றத்துக்கு அளிக்கிறது என தெரிவித்தனர்.
2ஜி வழக்கில் தாக்கம்:
2ஜி வழக்கில், எப்.ஐ.ஆர். மற்றும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறாத சில தொழிலதிபர்களுக்கு விசாரணைக்காக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
விசாரணை நீதிமன்றத்தின் இந்த சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொழிலதிபர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வின் இன்றைய கருத்து 2ஜி வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.