இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கல்லூரி ஆசிரியர் சங்க கட்டடத்தில் டிட்டோஜாக் கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது, பின்பு அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்ட போது பிப்ரவரியில் பேரணிமேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்ட போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே எடுத்த தனது நிலைப்பாட்டில் மாறாமல் பிடிவாதம்பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை குறித்து மற்ற 6 சங்கங்கள் ஆட்சேபம் தெரிவிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் அக்கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் மற்ற 6 சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 2ஆம் தேதி மாவட்ட அளவில் பேரணி நடத்துவது என்றும், போஸ்டர், துண்டு பிரசுரம் மற்றும் செலவு ஆகியவை அனைத்து சங்கங்களும் ஏற்க வேண்டும் என்றுமுடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து அனைத்து சங்கங்களும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை டிட்டோஜாக் அமைப்பில் இருந்து நீக்கி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகியிடம் கேட்ட போது இன்றைய கூட்டத்தில் நாங்கள் வெளியேறியது உண்மை தான், ஆனால் எங்கள் தரப்பில் பேரணியை கைவிட்டு மறியல் போராட்டம் போன்று அதிரடியாக இறங்கி போராட்டம் நடத்தலாம் என்று அறிவித்ததாகவும், அதில் மற்ற ஏனைய சங்கங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தார்.