சுய ஆற்றலைத் தூண்டும் வகையிலான கல்வி முறை வேண்டும் எனத் தொடர்ந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குரல் எழுப்பி வந்ததன் அடிப்படையில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி (பங்குனி 24- நம்மாழ்வாரின் பிறந்த நாள்) நம்மாழ்வார் கல்வி முறை என்ற பெயரில் புதிய கல்வி முறையைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
வானகத்தில் புதன்கிழமை நம்மாழ்வாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக திரைப்பட இயக்குநர் செந்தமிழன் 4 உறுதிமொழிகளை வாசிக்க, அனைவரும் அதைத் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அந்த உறுதிமொழிகள்: ரசாயனம் அற்ற விவசாய முறையை வளர்ப்பது, மருந்தில்லா மருத்துவத்தை பரப்புவது, சுய ஆற்றலைத் தூண்டும் கல்வி முறையை உருவாக்குவது, இயற்கை வளங்களைக் காப்பது நமது கடமை; அதற்காகப் போராடுவது நமது உரிமை.
இதைத் தொடர்ந்து வானகம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் லெ. ஏங்கெல்ஸ் ராஜா பேசியது:
சுய ஆற்றலை உருவாக்கும் கல்வி முறையை ஏற்படுத்த வேண்டும் என்பது நம்மாழ்வாரின் பிரதான குரலாக இருந்து வந்தது.
இதை நிறைவேற்றும் வகையில் நம்மாழ்வார் கல்வி முறை என்ற பெயரில் ஒரு புதிய கல்வி முறையை முறைப்படியான பாடத்திட்டம் உருவாக்கி, அரசு அனுமதி பெற்று தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக வானகத்தில் காணும் பொங்கல் நாளன்று இயற்கை ஆர்வலர்கள் வருகை தருவார்கள். இந்த முறையும் வரும் ஜன. 16 ஆம் தேதி அனைவரையும் அழைக்கிறோம். அப்போது இன்னும் விரிவாகப் பேசித் திட்டமிடலாம் என்றார் ஏங்கெல்ஸ் ராஜா.
Source : www.dinamani.com