நாடு முழுவதும் 3,000 ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ இந்திய தபால் துறை திட்டமிட்டுள்ளது. இது தவிர 1,35,000 சிறிய வகை ஏடிஎம்களை அமைக்கவும் அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் 3 ஏடிஎம்கள் பிப்ரவரி 5ம் தேதி நிறுவப்படும் என்று இந்திய அஞ்சல் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் தெரிவித்தார். இன்னும் ஓராண்டில் 1000 ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்றும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் பத்மினி தெரிவித்தார்.
அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 26 கோடி பேர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். வங்கி வாடிக்கையாளர்களும் இந்த ஏடிஎம்மை பயன்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
வங்கி தொடங்க தபால் துறைக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதி தரும் என்றும் பத்மினி நம்பிக்கை தெரிவித்தார். இந்திய அஞ்சல் துறை வசம் மக்களின் 6 லட்சம் கோடி ரூபாய் சேமிப்புப் பணம் உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியிடம் உள்ள வாடிக்கையாளர் பணத்தில் சரி பாதியாகும்.
Source : http://www.puthiyathalaimurai.tv/