நாட்டில், 18 வயது நிரம்பப் பெற்ற அனைவருக்கும், வங்கி கணக்கு வழங்க வகை செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக, ரிசர்வ் வங்கி, சிறு வர்த்தகர்கள், குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினருக்கான நிதி சேவைகள் குறித்து ஆராயும் வகையில், நச்சிகேத் மோர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.இக்குழு அளித்துள்ள பரிந்துரை: வரும் 2016ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்குள், நாட்டில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பாதுகாப்பான மின்னணு வங்கி கணக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கணக்கில், பணம் செலுத்துவது, பணம் எடுப்பது உள்ளிட்ட முழு வங்கி சேவையும் இருக்க வேண்டும். இந்த வங்கி சேவை குறைந்த தூரத்தில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த வங்கி கணக்கை துவங்குவதற்கு, ஆதார் அட்டையை பயன்படுத்தலாம். இது தவிர, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் மற்றும் வட்டி போன்றவற்றை தள்ளுபடி செய்வதை கைவிட்டு, அதற்கு பதிலாக, இந்த பலன்கள் விவசாயிகளுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.