வெளிநாட்டு கல்விக்காக ரூ.10,000 கோடி செலவழிக்கும் இந்தியர்கள்!


இந்திய மாணவர்கள், சுமார் 10 ஆயிரம் கோடிகள் வரை, வெளிநாட்டு கல்விக்காக செலவழிக்கிறார்கள். இதனால், இந்தியா நிறைய மனித வளங்களை இழக்கிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவைப் பொறுத்தவரை, விரும்பிய உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனவே, இந்திய மாணவர்கள் வெளிநாடுகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இந்தியா தனது அந்நிய செலாவனியை பெருமளவில் இழக்கிறது. எனவே, இந்தியாவின் உயர்கல்வித் திட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொண்டு, அந்நிய செலாவனியை தக்க வைக்கலாம்.

இந்தியாவில் உயர்கல்வி தொடர்பான விதிமுறைகளை எளிதாக்கி, பொது - தனியார் ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்திய பல்கலைகளில் இடம் கிடைக்காத காரணத்தினாலேயே, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இந்திய மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

கடந்த 2012 - 13ம் ஆண்டு காலகட்டத்தில், வெளிநாட்டில் படிப்பதற்காக, ரூ.10,000 கோடி மற்றும் அதற்கும் மேலாக, சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் செலவழித்துள்ளனர்.

உதாரணமாக, இந்திய ஐ.ஐ.டி.,யில் படிக்கும் ஒரு மாணவர், ஒரு மாதத்திற்கான கட்டணமாக 150 டாலர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால், அதேநிலையிலான படிப்பிற்கு, அதே காலகட்டத்திற்கு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில், சுமார் 2,000 முதல் 6,000 டாலர்கள் வரை செலவாகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, வெறும் 12% மாணவர்களே உயர்கல்வி பெறுகின்றனர். ஆனால் அமெரிக்காவிலோ அந்த எண்ணிக்கை 82%. பாகிஸ்தானில் 5%, சீனாவில் 20% மற்றும் பிரேசிலில் 24% என்ற அளவில் நிலைமை உள்ளது.

IIT மற்றும் IIM போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ள மிகவும் குறைந்தளவு இடங்களால், சுமார் 95% மாணவர்களால், நுழைவுத் தேர்வு எழுதினாலும், இடம்பெற முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, இவர்களில் பெரும்பாலானோர், தாங்கள் விரும்பிய உயர்கல்வியைப் பெறுவதற்கு வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.

எனவே, தனது உயர்கல்வி கொள்கையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதன்மூலம் அந்நிய செலாவனியை இந்தியா தக்கவைக்க முடிந்தால், அதை வைத்து பல பல்கலைகளை இந்தியாவில் ஏற்படுத்தலாம். இதன்மூலம், பல வெளிநாட்டு மாணவர்களுக்கு, இந்தியா, கல்விக்கான கேந்திரமாக திகழ முடியும் மற்றும் கல்வித்துறையில் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் இங்கே உருவாக்க முடியும்.

தற்போது இந்தியாவில் 90 கோடி பணி நிலைகள் உள்ளன. இவற்றில் 90% பணிகள், திறன்களுக்கானவை. வெறும் 9% மட்டுமே அறிவுக்கானவை. இவ்வாறு பல்வேறு அதில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி