சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, இலவச 'பஸ் பாஸ்' வழங்க வேண்டும் என்ற நீதிபதிகள் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், இடைக்கால தடை விதித்தது.மதுரை அரசு சட்டக் கல்லூரி மாணவர், திசை இந்திரன். இவர் ஏற்கனவே, மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்த பொதுநல மனு: பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கு, அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தமிழகத்தில், அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும், இலவச பஸ்பாஸ் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் கொண்ட பெஞ்ச்,"சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, அரசு போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலர் பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும்" என உத்தரவிட்டனர். இதை மறு ஆய்வு செய்யக் கோரி, போக்குவரத்துக் கழகநிர்வாகம், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், எம்.வேணுகோபால் கொண்ட பெஞ்ச் முன், மனு நேற்று, விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன் ஆஜரானார். சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, பஸ் பாஸ் வழங்கும், பெஞ்ச் உத்தரவிற்கு, நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.