துவக்கப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, அறிமுகம் செய்யபடுத்தப்பட்ட, ஏ.பி.எல்., கல்வி முறை, (செயல்வழி கற்றல்) எந்த பள்ளியிலும் பின்பற்றப்படாததால், ஏ.பி.எல்., அட்டைகள் காட்சிப்பொருளாகி விட்டன. பல கோடி ரூபாய் செலவு செய்து, நடைமுறைப்படுத்தப்பட்ட, இக்கல்வி முறை பயனற்று போனது, கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
புதிய கல்வி முறை: தமிழகத்தில், 2006ம் ஆண்டுக்கு முன் வரை,துவக்கப்பள்ளிகளில் புத்தக கல்வி முறை இருந்து வந்தது. மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டு, அதில் உள்ள பாடங்களை ஆசிரியர் நடத்துவது வழக்கம். ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும், ஒரே வித புரிந்து கொள்ளும் தன்மையில் இருக்க வாய்ப்பில்லை என்பதால், கல்வி ஒரு சிலருக்கு இனிப்பாகவும், ஒரு சிலருக்கு கசப்பாகவும் இருப்பதாக கருதி, அப்போதைய சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த விஜயகுமார், ஏ.பி.எல்., எனும் கல்விமுறையை, ஒரு சில பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தினார்.இதில் பாடங்கள் அனைத்தும், வண்ண அட்டைகளாக மாற்றப்பட்டு, வகுப்பறையில், "ட்ரே"யில் அடுக்கப்படும். இதில் மாணவர்கள் படிநிலைக்கு ஏற்ப, குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்கள் படிநிலைக்கேற்ப பாடங்களை அவர்களே படித்துக்கொள்ளும் முறை அமைக்கப்பட்டது. இதில் மாணவர்கள் தாங்களாகவே, கற்றுக்கொள்ளும் படி இருந்ததால், மாணவர்களிடையே நல்ல வித்தியாசம் தெரிந்தது. இதைஆய்வு செய்த அரசு, கடந்த, 2006 - 07ம் கல்வியாண்டில், அனைத்து துவக்கப் பள்ளிகளுக்கும், இம்முறையை அறிமுகம் செய்தது.ஐ.ஏ.எஸ்., அதிகாரியான விஜயகுமாரை, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனராக நியமித்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அனைத்துபள்ளிகளுக்கும் ட்ரே, ஏ.பி.எல்., அட்டைகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி என, இதற்காக, பல கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே கற்றலுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதால், ஆசிரியருக்கு வேலைப்பளு அதிகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கான, "லெசன் பிளான்" எழுதுவது உள்ளிட்ட பணிகள் செய்ய தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.ஆனால், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய விஜயகுமார், இத்திட்ட பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஏ.பி.எல்., கல்வி முறையில், அதிகாரிகள் அக்கறை காட்டுவதில், அலட்சியம் காட்டினர். அதிலும், குறிப்பாக கடந்த ஆண்டு, முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்த பின், ஏ.பி.எல்., கல்விமுறை, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வரை, செலவழித்து வாங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை பயனற்று கிடக்கின்றன.இதுகுறித்து, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: புத்தகத்தில் உள்ள பாடங்களை வண்ண அட்டைகளாக மாற்றி, வகுப்பறையில் வைத்த பின்பும், அதே புத்தகத்தை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த குளறுபடி ஆண்டுக்காண்டு அதிகரித்து, தற்போது அனைத்து பள்ளிகளிலும், புத்தக கல்வி முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. இதற்கேற்றாற்போல், ஏ.பி.எல்., அட்டைகளும் புதிதாக வழங்கப்படுவதில்லை. இதனால் பழைய அட்டைகள் முதலான உபகரணங்கள் காட்சிப்பொருளாகிவிட்டன.ஏ.பி.எல்., கல்வி முறைக்காக, குறைக்கப்பட்ட பணிகளை, தற்போது ஆசிரியர்கள் செய்வதில்லை. இதனால் புத்தக கல்வி முறையிலும் தரம் குறைந்துவிட்டது. இதனாலேயே அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. முதலில் எந்தகல்வி முறையை பின்பற்ற வேண்டும் என்ற தெளிவான முடிவை கல்வித்துறை அலுவலர்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.