பிரச்சனை இல்லாத குடும்பம் எங்கும் இல்லை. பெற்றவர்களுக்கு இடையே நடக்கும் சண்டையால், குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி, படிப்பில் கோட்டை விடுகின்றனர்.
குழந்தைகளின் படிப்பையும், மகிழ்ச்சியையும் பற்றி கவலைப்படாத பெற்றோர், தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். சண்டை மிகுந்த குடும்பச் சூழலை கொண்ட குழந்தைகள், அச்சூழலை திறம்பட கையாண்டால், தாங்கள் அடையும் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தவறுகளை தேடாதீர்
பெற்றோர் மீது நீங்கள் தவறை கண்டுபிடித்தால், தவறு யார் மேல் உள்ளதோ, அவரை வெறுத்துப் பேசும் எண்ணம் மேலோங்கும். இதனால், உங்கள் மேல் வெறுப்பு உண்டாகும். இருவருடனும் தனித்தனியே பாசத்துடன் பேசினால், பெற்றோர் மனதை மாற்றக்கூடும்.
காது கொடுத்து கேளுங்கள்
பெற்றோர் சண்டையிடும் போது, அவர்கள் பேசுவதை கேளுங்கள். அப்போது தான் அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை உங்களால் அறிய முடியும்.
முடிவெடுக்காதீர்
பெற்றோரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே முடிவெடுக்காதீர்கள். அவர்கள் கருத்துக்களை கேட்டு, பின் அவர்கள் புரிந்து கொள்ளும் படி கருத்துக்களை தெளிவாகக் கூறுங்கள்.
அவகாசம் கொடுங்கள்
உங்கள் கருத்துக்களை அவர்கள் யோசித்து செயல்படுத்தும் வரை, பொறுமையாக இருங்கள். சொன்னா புரியாதா? எனக் கத்தாதீர்கள்.
உங்கள் பெற்றோரின் முடிவை எதிர்க்காதீர்கள்.
பொதுத் தலைப்பில் உரையாடுங்கள்
சண்டை தொடங்கும் தருணத்தில், அவர்கள் கவனத்தை மாற்றும் வகையில் ஏதேனும் பொதுவான தலைப்பில் பேச்சை துவக்குங்கள். இதனால் அவர்கள் கவனம் உங்கள் பக்கம் திரும்பி, தங்கள் பிரச்சனையை மறப்பர்.
உங்களால் தான் என எண்ணாதீர்
உங்களால் தான் பெற்றவர்களுக்கு இடையே சண்டை ஏற்படுகிறது என எண்ணாதீர்கள். அவர்களுக்கு இடையே ஏற்படும் சில முரண்பாடுகள் தான், பிரச்சனைக்குக் காரணம் என உணருங்கள்.
நீங்களே ஆதரவு
பிரச்சனை துவங்கும் கடினமான நேரத்தில், உங்கள் ஆதரவு அவர்களை கட்டுப்படுத்தும். நீங்கள் அந்த நேரத்தில், அவர்களுக்கு நல்ல நண்பராக, ஆலோசகராக இருந்து அவர்கள் உணர்வுகளை உங்கள் பக்கம் திருப்புங்கள். உங்கள் அன்புக்கு அவர்கள் கட்டுப்படுவர்.