மனித வள மேம்பாட்டுத் துறை
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை, கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதில் நேஷனல் மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம் முதன்மையானது. இந்தத் திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளைப் படிக்கும் 82 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற 25 வயதுக்குள் இருக்க வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ படிப்பவர்களுக்கும் இந்த உதவித் தொகை உண்டு. பி.இ., எம்பிபிஎஸ், படிப்பவர்களுக்கு மட்டுமல்ல பி.எஸ்ஸி., பி.காம்., பி.ஏ. படிப்பவர்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனை பெற பள்ளியில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாநில அளவில் வெளியிடப்படும் தரப் பட்டியலில் நல்ல இடம் பிடித்திருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்படும். என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் போன்ற தொழில்சார்ந்த படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ. ஆயிரம் வீதமும் அடுத்து வரும் ஆண்டுகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதமும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த இணையதளத்தில் ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகளையும், சென்ற ஆண்டு உதவித்தொகை பெற்றவர்களின் பட்டியலையும் இணைத்திருக்கிறார்கள். இதைத்தவிர, ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மொழியினை ஒரு பாடமாக எடுத்துப் படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் இளநிலைப் படிப்பு முதல் பிஎச்.டி. படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல விவரங்கள் இந்த இணையதளத்தில் உள்ளன.
மத்திய சமூக நீதித் துறை
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய அமைச்சகத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பல்வேறு திட்டங்கள் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் படிக்கும் அனைத்துப் படிப்புகளுக்கும் (டிப்ளமோ உள்பட) போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
எம்பில், பிஎச்டி படிக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ராஜீவ் காந்தி தேசியக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெறும் அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.16 ஆயிரம் வீதமும் அதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் வீதமும் உதவித் தொகை வழங்கப்படும். என்ஜினீயர் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் வீதமும் அதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வீதமும் உதவித் தொகை வழங்கப்படும் 9-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை தகவல்களும் உள்ளன.
-"புதிய தலைமுறை"