படிப்பு ஏறாததால் 6ம் வகுப்போடு பள்ளியை விட்டு ஓடிய மாணவன், இன்று உலகையே திரும்பிப் பார்க்கவைத்த அதிசயம்! MUST READ!!

படிக்கிற வயசுல ஏதோ காரணத்துனால சரியா படிக்க முடியாம போயிடுச்சேன்னு வருத்தப்படுற ஆளா நீங்க?


உங்க குழந்தைகளுக்கோ, உறவினரின் குழந்தைகளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளுக்கோ படிப்பு சரியாக ஏறவில்லை என்று நினைக்கிறீர்களா?


ச்சே… எங்கே போனாலும் நம்மளை இப்படி எட்டி எட்டி உதைக்கிறாங்களே… உண்மையில் நாம வேஸ்ட் போல….அப்படின்னு அடிக்கடி தோணுதா உங்களுக்கு?
வாழ்க்கையில அவமானத்தை தவிர வேறு எதுவும் பார்க்காத ஆளா நீங்க?
வயித்து பிழைப்புக்காக இந்த வேலையெல்லாம் செய்யவேண்டியிருக்கேன்னு விதியை நொந்து கொள்பவரா?
வாழ்க்கையை தேடுபவரா? அல்லது அதில் போராடுபவரா?
மேற்படி பிரிவுல நீங்க யாராயிருந்தாலும் சரி… இந்தப் பதிவு உங்களுக்கு தான். நிச்சயம் இந்தப் பதிவு உங்க பிரச்னைகளுக்கு ஒரு நல்ல பதில் சொல்லும்.
நான் ஏற்கனவே முந்தைய பதிவு ஒன்றில் சொன்னேன்…. “நமக்கு எனக்கு நடக்கிறதோ அது வாழ்க்கையல்ல. அதற்கு நாம் எப்படி ரீயாக்ட் செய்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது” என்று. நான் சந்திக்கும் சாதனையாளர்கள் எல்லாரும் ஒரு வகையில் இதனடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தான்.
படிக்காத மக்குப் பையன்
சரி. ஒ.கே. இப்போ நான் படிப்பே ஏறாத ஒரு படிப்பே ஏறாத ஒரு பையனோட கதையை உங்க கிட்டே சொல்லப் போறேங்க. சுமார் 20 அல்லது வருஷத்துக்கு முன்னாடி நடக்குற கதை இது.
வசதிமிக்க குடும்பத்தில் இவன் பிறக்கவில்லை என்றாலும் ஓரளவு நடுத்தரமான குடும்பம் இவனுடையது. குடும்பத்தில் இவன் மூத்தவன்… சிறு வயதிலேயே அதாவது ஐந்தாவது வயதிலேயே இவனை சின்னம்மை, மஞ்சள் காமலை, டைஃபாயிடு, டெங்கு உள்ளிட்ட எண்ணற்ற நோய்கள் தாக்கியதில்… இவனது உடம்பே நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது. மருந்து மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதில் நோய் எதிர்ப்பு சக்தியும் போய்விட்டது. உடம்பு நல்லாயிருந்தாத் தானே மூளை நல்லாயிருக்கும்? இப்படி ஒரு பலவீனமான உடம்புல மூளை மட்டும் எப்படி சரியா வேலை செய்யும்?


படிச்சா மனசுல தங்காது. வாத்தியார் சொல்லிக்கொடுக்குறதும் புரியாது. போர்டுல எழுதி சொல்லித் தர்றதை கூட திரும்ப எழுத முடியாது. அப்படியே எழுதினாலும் அதுல ஆயிரம் தப்பு இருக்கும். கிளாஸ்ல இவனோட பேர் என்ன தெரியுமா? “தூங்குமூஞ்சி பயல்!”என்பது தான்.
வகுப்பில் தூங்குவதில் அப்படி ஒரு சூரர். இவர் வகுப்பில் தூங்குவதை பார்த்து, டீச்சர் இவனை பிரம்பால் அடித்து பெஞ்சில் நிற்க வைக்க, நின்றபடியே இவன் தூங்கிவிட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் எப்பேர்ப்பட்ட கும்பகர்ணன் என்று. “உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. எப்படியோ போய்த் தொலை” என்று ஆசிரியர்கள் கடைசியில் கைகழுவி விட்டனர்.
ஒன்றுமில்லை… இந்த மாணவன் DYSLEXIA (கற்றலில் குறைபாடு) என்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். அமீர்கான் நடித்த“TAARE ZAMEEN PAR” படத்தில் அந்த சிறுவனுக்கு வருமே அதே தான். சுமார் 20 வருடம் முன்பு என்பதாலோ என்னமோ அது பற்றிய விழிப்புணர்வு இவனுக்கோ, இவனது குடும்பத்தினருக்கோ அல்லது ஆசிரியர்களுக்கோ இல்லாமல் போனது.
எத்துனை நாள் தான் இப்படி பள்ளி சென்று தூங்குவது…அவமதிப்புகளுக்கு மத்தியில் மேற்கொண்டு படிப்பை தொடர விருப்பம் இன்றி, 6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்புக்கு டாட்டா கூறிவிடுகிறான். ஒரு ஸ்கூல் படிக்கிற பையன்… அதுவும் ஆறாம் வகுப்போட ஸ்கூலை டிஸ்கண்டின்யூ பண்ணினா என்னாவான்?அவனோட வாழ்க்கை எப்படி திசை மாறிப்போகும்? கற்பனை கூட செஞ்சி பார்க்க முடியலே இல்லே…?
லாட்டரி சீட்டு வாங்கலியோ…. லாட்டரி சீட்டு….
நம்ம பையன் என்ன பண்ணினான்னா தெருத் தெருவா போய் லாட்டரி சீட்டு வித்தான். அப்புறம் ஒரு சின்ன லாட்டரி கடையில் உட்கார்ந்தான். ஏதோ அன்னைன்னக்கு செலவுக்கு வருமானம் கிடைச்சது. வயசு ஏற ஏற ஸ்கூலுக்கு யூனிபாரம் போட்டுக்கிட்டு புக்ஸை தூக்கிட்டு போற பசங்களை பார்க்கும்போது இவனுக்கு ஏக்கமா இருக்கும். ஆனா அவங்க கூட இவனால பேசக் கூட முடியாது. ஏன்னா நம்ம பெத்தவங்க தான் சொல்லிக்கொடுத்திருக்காங்க இல்ல….. “நல்லா படிக்கிறவன் நல்ல பையன். நல்லா படிக்காதவன் கெட்ட பையன்”. (யப்பா என்னா கண்டுபிடிப்பு…! இதை நம்ம மனசுல சின்ன வயசுலயே மனசுல திணிச்சதாலே என்னவோ, சொக்கத் தங்கங்களை எல்லாம் விட்டுட்டு, படிப்போட சூதும் வாதும் நிறைய வெச்சிருந்தவங்க கூடவே நாம நட்பை வளர்த்துகிட்டோம். இல்லையா?)
இங்கே நம்ம ஆளு கூட பழக விரும்புற பசங்களை அவங்களை பெத்தவங்க… “அவன் மக்குப் பையன். அவன் கூட சேராத. அவன் கூட சேர்ந்தா… நீயும் அவனை மாதிரி லாட்டரி டிக்கட் விற்க வேண்டியது தான்” என்று கண்டித்து வைத்திருந்தனர். ஆகையால் எந்த மாணவனும் இவருடன் பேசுவதற்கு கூட முன் வரவில்லை.
நம்ம ஆளுக்கோ படிக்கவும், ஸ்கூலுக்கு போகவும் கொள்ளை ஆசை. இருந்தாலும் விதியை நொந்துகிட்டு லாட்டரி வித்துகிட்டு இருந்தாரு.
ஒரு நாள் இந்த பையனோட நண்பன் ஒருத்தன் ஒரு ஐடியா கொடுத்தான். அது என்னன்னா… “ஸ்கூலுக்கு போய் தான் பரீட்சை எழுதனும்னு அவசியம் இல்லே… 8 ஆம் வகுப்பு ப்ரைவேட்டா கூட எழுதலாம்”னு சொன்னான்.
“இது நல்ல ஐடியாவா இருக்கே!”ன்னு சொல்லி, லாட்டரி கடை வேலையை பார்த்துகிட்டே எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினான். அதுல பாஸ் பண்ணினவுடன், ஓரளவு நம்பிக்கை வந்தது. பத்தாம் வகுப்பும் ப்ரைவேட்டா எழுதினான். சொன்னா நம்பமாட்டீங்க…ஐயா கணக்குல 92 மார்க்.


உன்னையெல்லாம் சேர்த்துக்கிட்டா எங்க ஸ்கூலோட இமேஜ் என்னாகுறது ?
தமிழ்நாட்டுல லாட்டரி பிசினஸ் தானே ஒரு காலத்துல ஓஹோன்னு போச்சு. (இப்போ டாஸ்மாக்!). ஓரளவு நல்லா போய்கிட்டிருந்த நேரத்துல கவர்மென்ட் திடீர்னு லாட்டரியை தடை பண்ணிடுச்சு. So, ஒரே நாள்ல நம்ம ஆளு நடுத்தெருவுக்கு வந்துட்டாரு. ஸ்கூல்ல சேர்ந்து பிளஸ் ஒன் படிக்க ஆசை. ஆனா இவரை எந்த ஸ்கூல்லயும் சேர்த்துக்கலை. “உன்னையெல்லாம் சேர்த்துக்கிட்டா எங்க ஸ்கூலோட இமேஜ் என்னாகுறது? தவிர நீ எட்டாவது, பத்தாவது ரெண்டுமே ப்ரைவேட்டா வேற எழுதி பாஸ் பண்ணியிருக்கே. உனக்கெல்லாம் அட்மிஷன் நிச்சயமா கொடுக்க முடியாது!” இப்படியாக ஒவ்வொரு பள்ளியிலும் சொல்லி கேட்டை கூட சாத்திவிட… சுவற்றில் அடித்த பந்து போல இவர் திரும்ப வந்துவிடுகிறார்.
படிச்சிருந்தா வேற ஏதாச்சும் வேலைக்கு போகலாம். படிப்பும் கம்மி என்பதால் கடையை ஏறகட்டிட்டு… கட்டிடம் கட்டுற சித்தாள் வேலைக்கு போனாரு. அவரோட உடம்பு வாகுக்கு கல்லும் மண்ணும் சுமக்க முடியலே. So, அதை விட்டுட்டு அப்புறம் ஜெராக்ஸ் கடைக்கு வேலைக்கு போனாரு. அதுவும் சரியா வரலே. தப்பு தப்பா எடுத்து கஸ்டமர்ஸ் கிட்டே கொடுத்தா அதுல ஒருத்தர் அடிக்கவே வந்துட்டாரு. சரி… அந்த வேலையையும் விட்டாச்சு….அடுத்து சவுண்ட் சர்வீஸ் கடை. அப்புறம் டீ.வி.மெக்கானிக். இப்படியே வாழ்க்கையில் செட்டிலாக நிலையான இடம் தேடி அலையோ அலை என்று அலையுறார். கடைசியில் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் ஒன்றில் வேலை கிடைக்க அங்கு வேலையில் சேர்கிறார்.
அங்கிருந்தபடியே +2 ப்ரைவேட்டா எழுத ப்ரிப்பேர் பண்றார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கிறார். எழுதி எழுதி பழகுறார்.

டாக்டர் கொடுத்த தண்டனை
அப்படி இருக்கும்போது ஒரு நாள்… இவருக்கு சளியோ காய்ச்சலோ ஏதோ பிரச்னை வர…. தங்கள் பகுதியில் இருக்கும் ஒரு பிரபல கிளினிக்கிற்கு செல்கிறார். அங்கு டாக்டருக்காக வரிசையில் காத்திருந்தபோது அங்கே கண்ணடி ஷெல்பில், உள்ள தடிமனான புக் ஒன்று இவரை கவர்கிறது. ஷெல்பை ஓபன் செய்து… ஆவலுடன் அந்த புக்கை எடுத்து புரட்டுகிறார். ஐ.ஏ.எஸ். பணிக்கான மத்திய அரசின் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவது பற்றிய புத்தகம் அது. ஆவலுடன் பக்கங்களை புரட்டுகிறார். கிளினிக் அட்டென்டன்ட் இவர் ஷெல்பை திறந்து புத்தகத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு சத்தம்போட,டாக்டர் தனது அறையிலிருந்து வெளியே வருகிறார். வந்தவர்,அழுக்கான ஒரு மெக்கானிக் சிறுவனின் கைகளில் விலை உயர்ந்த அந்த புத்தகம் இருப்பதை பார்த்துவிட்டு, “இவனை ஓரமா வெயிட் பண்ணச் சொல்லு… பேஷண்ட்ஸ் எல்லாரையும் அனுப்பிட்டு நான் வர்ரேன்!” என்று கூறிவிட்டு போய்விடுகிறார். சிறிது நேரத்தில் அனைத்து நோயாளிகளையும் பார்த்து அனுப்பிவிட்டு, நேரே நம்மாளிடம் வருகிறார். “என்ன தைரியம் உனக்கு? எவ்ளோ துணிச்சல் இருந்தா ஷெல்பை திறந்து அந்த புக்கை எடுத்து பார்ப்பே…? DISCIPLINE என்றால் உனக்கு என்னன்னு தெரியாதா? நான் சொல்லித் தர்ரேன்” என்று கூறி, அட்டண்டரை கூப்பிட்டு சிறுது கல்-உப்பு எடுத்து வரச் சொல்கிறார். கல்-உப்பு வர,அதை ஓரமாக கீழே போட்டுவிட்டு, “அது மேலே ஒரு பத்து நிமிஷம் முட்டி போடு!” என்று பணிக்கிறார்.
செய்யக்கூடாத தப்பை செஞ்சிட்டோம் போல… என்று எண்ணிக்கொண்டே நம்ம ஆளு அதன் மேலே முட்டி போடுகிறார். கல் உப்பு மேலே முட்டி போட்டா எப்படியிருக்கும்னு தெரியுமா?
ஓகே… மேட்டருக்கு வருவோம்….


அன்று கல்-உப்பு மீது முட்டி போட்ட சிறுவன்… அதன் பிறகு டூ-வீலர் கடையில் வேலை பார்த்தபடி +2 ப்ரைவேட்டாக எழுதி,அதிலும் பாஸாகிவிடுகிறார். இவருக்கு கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்.சி. கணிதம் படிக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் தனித் தேர்வராக தேர்வு எழுதி பாஸ் செய்தவர் என்பதால் எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை. எப்படியோ அடித்து பிடித்து கெஞ்சி கூத்தாடி நகரின் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேர்ந்து, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கிறார். (B.A. Eng. Literature). அங்கு கல்வியே அவருக்கு போராட்டமாகத் தான் இருந்தது. இவரது ஆங்கில அறிவை பார்த்து அனைவரும் பரிகசிக்க, இவரோ அவற்றை பற்றி கவலைப்படாமல் தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார். மூன்றாண்டுகள் முடிவில் இவரது வகுப்பில் அரியர்ஸ் இல்லாமல் டிகிரி வாங்கிய ஒரே மாணவர் இவர் மட்டும் தான். அதன் பிறகு எம்.ஏ. சேர நிறைய கல்லூரிகளுக்கு அப்ளிகேஷன் போடுகிறார். அந்த நிலையிலும் நிறைய கல்லூரிகள் இவரை சேர்த்துக்கொள்ளவில்லை.
கடைசியில் மாநிலக் கல்லூரியில் “வெராண்டா சிஸ்டமில்’ (Veranda System) அட்மிஷன் கிடைக்கிறது. அதாவது போனாப் போகுதுன்னு கொடுக்கிறது. அங்கு அவருக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்கள் மூலம் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகள் பற்றி அறிமுகம் கிடைக்கிறது. TNSPSC Group 2 (Tamil Nadu Public Service Commission  தேர்வு எழுதுகிறார். அதில் பாசாகி ஏ.எஸ்.ஒ.வாக வேலை கிடைத்தது. அடுத்த இலக்கு, Group 1 தேர்வு எழுதினார். அதில் வெற்றி. கூட்டுறவுத் துறையில் சப்-ரெஜிஸ்ட்ராராக வேலை கிடைக்கிறது. 3 வருடங்கள் பணிபுரிகிறார். இடையே (IAS) UPSC தேர்வுக்கு தயாராகி அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறார். தமிழ்நாட்டில் அந்த பேட்ச்சில் பாஸானவர்களில் நம்பர் 1 இவர் தாங்க. பிறகென்ன ஐ.ஏ.எஸ். வேலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அதில் தமிழ்நாட்டுப் பிரிவு கிடைக்கவில்லை. எனவே, IRS ஐ தேர்ந்தெடுத்து (Indian Revenue Service) அதில் பணியில் சேர்கிறார்.


அவர் தான் திரு.நந்தகுமார் (Deputy Director (Investigation), Income-Tax Department). தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மண்டல அலுவலகத்தில் துணை இயக்குனர். இந்த பொறுப்பு எப்பேர்ப்பட்ட பொறுப்பு தெரியுமா? சமூகத்தில் இவருக்கு இருக்கும் அந்தஸ்து தெரியுமா? வருமான வரித் துறையின் இயக்குனர் ஒருவவருக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பும் மரியாதையையும் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை.


அன்றைக்கு எந்த பள்ளிகளெல்லாலாம் இவரை சேர்த்துக்கொள்ளமுடியாது என்று சொன்னார்களோ … அதே பள்ளிகள் இன்று “இவர் நமது பள்ளிக்கு வருவாரா? நம் மாணவர்களிடம் சிறிது நேரம் பேசுவாரா?” என்று இவரது அப்பாயின்மென்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். இது தாண்டா சாதனை!
இன்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று தன் கதையை மாணவர்கள் மத்தியில் சொல்லி, “நானே சாதித்திருக்கிறேன். உங்களால் முடியாதா என்ன?” என்று கூறி அவர்களின் மனதில் நம்பிக்கை விதைகளை விதைக்கிறார். எப்பேற்ப்பட்ட சேவை….!
Anti-climax
அப்புறம் விஷயம் தெரியுமா? இவர் ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணினவுடனே, தமது அனுபவ அறிவு மற்றவர்களுக்கும் பயன்படட்டும் என்று கருதி, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரத்தில் டியூஷன் எடுத்து வருகிறார். (ஐ.ஏ.எஸ். பாஸ் பண்ணிட்டு பிறகு டியூஷன் எடுப்பவர்கள் ரொம்ப கம்மி. நல்ல வேலைல செட்டிலாகிவிட்ட பிறகு எப்படி டியூஷன்லாம் எடுக்கனும்னு தோணும்?) இவர் நடத்தும் அந்த டியூஷன் வகுப்புக்கு ஒரு டாக்டரும் வருகிறார். அவருக்கு ஐ.ஏ.எஸ் எழுதி பாஸ் பண்ணனும்னு ஆசை. (ஆனா, அவரால PRELIMINARY கூட போகமுடியலே என்பது வேற விஷயம்). அந்த டாக்டர் வேற யாருமில்லேங்க… நம்ம ஹீரோவை உப்பு போட்டு முட்டி போட வெச்சாரே அதே டாக்டர் தாங்க.

இவரோட முயற்சியில் இவர் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும்… ஆனால் இதைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கான் என்பது தெளிவாக புரியும். இதற்க்கு முன்னாள் அந்த நம்பிக்கை இல்லாதவர்களுக்கு – உறைக்கும்.
ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும்
இந்த வெற்றி இவருக்கு ஒரே இரவில் கிடைத்ததல்ல. சுமார் 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு இறுதியில் கிடைத்தது. இந்த போராட்டத்தில் தான் எத்துனை அவமானம், அவமதிப்பு, ஏளனம்…ஆனா, அதுவெல்லாம் தன்னை பாதிக்கவிடாம இவர் தொடர்ந்து தனது முன்னேற்றத்தை பற்றி மட்டுமே சிந்தித்தபடியால் தான் இன்று இந்த நிலையில் இருக்கிறார். அப்படி அவர் தனக்கு ஏற்பட்ட அவமானங்களுக்கு நிலைகுலைந்து போயிருந்தார் என்றால் என்றோ நொறுங்கிபோயிருப்பார்.
சினிமாவா எடுத்து இந்த கதையை – உண்மைக் கதை – என்று சொல்லி ரிலீஸ் பண்ணாக் கூட பார்த்துட்டு நம்புறதுக்கு கஷ்டமா இருக்கும். இல்லையா? ஆனா இது ஒன்னும் சினிமா கதை இல்லீங்க. நிஜத்திலும் நிஜம்.


மேற்படி நிஜ சம்பவம் உணர்த்தும் நீதி என்ன?

நீதி 1 : அவமானத்தை கண்டு கலங்கவேண்டாம். அதுவே உங்களது முன்னேற்றத்துக்காக இறைவன் போடும் ஏணி.
நீதி 2 : சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் நீங்கள் கிளம்பிவிட்டால் அதன் பிறகு உங்களை தடுத்து நிறுத்த எவராலும் முடியாது.
நீதி 3 : எவரையும் அலட்சியமாக கருதவேண்டாம். அவமதிக்க வேண்டாம். காலம் யாரை, எங்கே, எப்போது வைக்கும் என எவராலும் கூறமுடியாது. அதே போல யாரை எப்போ எங்கே தூக்கியடிக்கும் என்றும் கூற முடியாது. அடக்கத்தோடு என்றும் இருங்கள். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பவர்களை பார்த்து பரிகசிக்கவேண்டாம்.


நீதி 4 : நாம் “இத்துடன் முடிந்தது” என்று கருதும் சந்தர்ப்பங்களில் தான் இறைவன் நமக்கு ஒரு பிரம்மாண்டமான தொடக்கத்தை தருகிறார். அதை அடையாளம் கண்டு நம்பிக்கையுடன் தொடர வேண்டியது நமது சாமர்த்தியம். தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
————————————————————
எப்படி இந்த சந்திப்பு சாத்தியமாயிற்று?
திரு.நந்தகுமார் அவர்களை நாம் சந்தித்த தருணங்கள் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வருமான வரித்துறை மண்டல அலுவலகத்தில் திரு.நந்தகுமார் அவர்களின் பிரத்யேக அறையிலேயே அவருடனான எனது சந்திப்பு நடைபெற்றது.


சாதனையாளர்களை தேடி புறப்பட்டுள்ள நமக்கு திரு.நந்தகுமாரின் அறிமுகம் கிடைத்தது எப்படி? அவர் நண்பரானது எப்படி? குண்டு சட்டிக்குள் குதிரை ஸாரி கழுதை ஓட்டிக்கொண்டிருந்த எனக்கு எப்படி இது சாத்தியமாயிற்று? யாராவது நீங்க அவசியம் சுந்தரை பார்க்கணும் என்று அவருக்கு ரெகமென்ட் செய்கிறார்களா?
நிச்சயமா இல்லீங்க. (நமக்கு ஒரே ரெகமெண்டேஷன் அந்த ஆண்டவன் தாங்க!). நமக்குள் இருக்கும் அந்த வெறி, அந்த ஃபயர் இருக்கு பாருங்க… அது நம்மளை நிச்சயம் வழிநடத்தும். நாம ஒரு விஷயத்தை நினைச்சா அது அடையாம விடாது.
திரு.நந்தகுமார் அவர்களைப் பற்றி நான் தளத்தில் படித்ததிலிருந்து, அவரை சந்திக்கவேண்டும்… அவரிடம் பேசவேண்டும்… அவரை பேட்டி காணவேண்டும்… அவரது வெற்றிக்கான ஃபார்முலாவை தெரிந்துகொண்டு உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்… என்று எனக்குள் ஒரு பயங்கர வெறி. ஆசை.


அந்த வெறி – தாகம் – எல்லா வழிகளையும் தானே ஏற்படுத்தி தந்துவிட்டது. இவரை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று நுங்கம்பக்காம் வருமான வரி அலுவலகத்துக்கு நான்கைந்து முறை ஃபோன் செய்து விசாரித்து, ஒருவழியாக இவரது லேன்ட்லைனை வாங்கி, இவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, இவரை நமது தளத்தை பார்க்கச் செய்து… அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் இவரை தொடர்பு கொண்டு பேசி இவரிடம் முறைப்படி அப்பாயின்மென்ட் பெற்று சந்தித்து…. இதோ உங்களிடம் முதல் பாகமே பகிர்ந்தாகிவிட்டது. (மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள்…அவரது நண்பர்கள்!)
இப்போ புரியுதா? நெஞ்சே உன்னாசை என்ன… நீ நினைத்தால் ஆகாதது என்ன… என்று.
குறிப்பு : என்னுடைய பழைய டீமை எல்லாம் கலைத்தாகிவிட்டது. இனி இது போன்ற சந்திப்புக்களில் Force Team நண்பர்கள் மட்டுமே உடன் இருப்பார்கள். (அதாவது வாழ்க்கையில் போராடுபவர்கள். இந்த சந்திப்பில் உடன் வந்திருக்கும் நண்பர் விஜய ஆனந்தும் சரி…நவீனும் சரி… அவரவர் லட்சியத்துக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள்!)
———————————————————————-
அடுத்த பாகத்தில்….
ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய ஒரு சராரசரிக்கும் கீழே இருந்த மாணவர், இன்று I A S தேர்வு எழுதி வெற்றி பெற்று (அதுவும் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று!) இந்த நிலையில் அமர்ந்திருப்பது எப்படி?
அதற்கு இவர் கையாண்ட முறைகள் என்ன?
சவால்களை எப்படி சாதனைகளாக மாற்றினார்?
அவமானங்களை எப்படி உரங்களாக மாற்றினார்?
தடைக் கற்களை எப்படி படிக்கற்களாக மாற்றினார்?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இவர் கூறுவது என்ன? அவர் எப்போதாவது இவருக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறாரா?
இவர் வேலை பார்த்த சவுண்ட் சர்வீஸ் கம்பெனியின் முதலாளியே இவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு ஒலிபெருக்கி அமைப்பை ஏற்படுத்திய சுவாரஸ்யம்.


இன்னும்… பலப் பல….!!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி