18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துவிட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, “சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை.

இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது’’ என்றனர்.

இந்த வழக்கில் நீதிபதி அரிபரந்தாமன் இன்று அளித்த தீர்ப்பு:

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, ஆசிரியர்களுக்கு கட்டாயம் தகுதி தேர்வு வைக்கவேண்டும். தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கல்வி கவுன்சில் தெளிவாக கூறியுள்ளது. உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. தற்போது தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கும்போது மனுதாரர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரிதான். அதை ரத்து செய்ய முடியாது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. ஏற்கனவே அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

நன்றி: 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி